Saturday, January 28, 2012

மாயங்கள் புரிகிறதே மதுவாகினி

உன்னுடனான உரையாடலுக்குப் பின்
செத்தை வெளியேற்றிய தாய்பசுவின் அமைதி கவ்வ
நூல் கோர்த்து தொங்கவிடப்பட்ட
வண்ண பலூன்களாக மிதக்கும் உன் வார்த்தைகள்
என்னுள் பயணிக்கத் துவங்குகிறது
சலவைக்குறியின் மையாகி
மகரந்தம் விதைக்கும் தட்டானாகவும்
நிலத்தை உயிர்ப்பூட்டும் மண்புழுவாகி
ஊற்றுக் கண்ணாகி கிணற்றை ஈரமாக்குகிறது
இலுப்பை பூவாகி உடலை சக்கரையாக்கி
பவளமல்லியாகி சுவாசம் மணந்திட்டு
தொட்டாஞ்சிணுங்கியாகி நாணம் காட்டுகிறது
சுற்றும் நாய் ஒன்றிற்கு
பரிவுபொங்க சோறிட்டு
மீந்த மீந்த பாலூட்டுகிறது பூனைக்கு
வழிய வழிய செடிகளுக்கு நீர் இறைத்து
கையேந்துபவருக்கு ரூபாய்தாளை பிச்சையிடுகிறது
இருசக்கர வாகனத்தையும்
குதிரைகள் பூட்டிய ரதமாக்கி
புவி ஆளப் பிறந்தவனாய் பவனிவரச் செய்து
மாயங்கள் புரிகிறதே மதுவாகினி...

நன்றி: நவீன விருட்சம்

No comments:

Post a Comment