Wednesday, February 22, 2012

வதைகளின் ருசியறிந்தவர்கள்


சமச்சீராக வெட்டப்பட்ட

புல்தரையின் மத்தியில்தான் கண்டேன்
ஏற்றுக்கொள்ளுங்கள்
சொல்வது உங்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவன்
சிலுவை சுமந்தால் நம்புவீரென்றால்
தயாராகவே இருக்கிறேன்
யார்தான் ஏற்றப்போகிறீர்கள்
ஒப்புக்கொள்வேன் யாராகினும்
கவிச்சி மணம் வீசும்
தேவதையாக இருப்பின்
கூடுதல் மகிழ்வு
போதி மரத்தினடியிலிருந்துதான்
சொல்லப்பட வேண்டுமெனில்
ஒன்றும் செய்வதற்கில்லை
எல்லாவற்றையுமே வெட்டித் தொலைத்தீர்கள்
வேறு எதையோ
கதைக்கத் தொடங்கிவிட்டேன்
மன்னியுங்கள்
நிகழ்விற்கு வருகிறேன்
ஏன் எல்லோரும்
காதை அடைத்துக் கொண்டீர்கள்
உண்மைகள் வேண்டாமென்றோ
யானறியேனே பொய்யுரைக்க
காத்திருப்பேன்
அடைத்திருக்கும் கைகளை
மாற்றிக்கொள்ளும் துளி நேரத்திற்கு...
ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில் இரு அகப்பையோடு

ஆண்ட கிழவனாரும்

ஆளும் குமரியும்...

No comments:

Post a Comment