Friday, June 1, 2012

காலத்தின் நிழல்கள்

முன்னொரு காலத்தில்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தினடியில்
நைந்து கிடந்த மார்புக் கச்சையென
அறிமுகமாகிய புறா பருத்திக்காடானது
தன்னை நூலாக உருமாற்றி
இணங்கி இணங்கி ஆடையானது
விரிவு கொள்ளும் வானமாக
நீண்டு கொண்டிருந்தது ஆடை
என் சமூகத்தாரின் உடலேற்ற மறுக்கப்பட
எட்டுத்திக்கும் உலகை போர்த்தியது
பீச்சி வெளியேற்றப்பட்ட இழப்புகளின்
ரத்தங்களை உறிஞ்சக் கொடுத்து வெற்றிகொள்ள
உடலேறிய ஆடை
கம்பீரங்களின் கணம் மினுங்கியது
முப்பத்தியேழு ஆண்டுகால சிலுவையின்
துயர்தோய்ந்த கதை கூறி
முலை மறைத்து
மிதந்து சென்றது புறா
காலத்தின் நிழல்களை விதைத்தவாறு...
0

இருளென்பது குறைந்த ஒளி

எனை நினைவில் வைத்திருக்கிறாயா
என் வீதியில் குடியேறிய நாளில்தான் பூத்திட்டேன்
மாதாமாதம் தவறாது நிகழ்ந்திடுவதால்
கொண்டாட்டத்தின் நாளாகவே இன்றளவும்
நீ எதிர்படும் கணங்களில்
கரைந்து கரைந்து கூடியிருக்கேன்
எனக்கு தெரிந்திருக்கவில்லை
உன் மீதான காதலை எப்படி வெளிப்படுத்துவதென
விட்டுவிடலாம் முடிந்துபோன கதை
எதையோ எதிர்பார்த்தும் எழுதவில்லை
உன் பொருட்டும் ஒருத்தி
நீ அறிந்து கொள்ளத்தான்...
மேலும் தொடர முடியாதுபோக மன்னிப்புக்கோரி
வாசித்த நாவலின் பக்கங்களில்
அப்பெண்ணை உறங்கச் செய்தேன்
எங்களிடையே ஒளியூட்டிக் கொண்டிருந்த
கடைசி மெழுகுவர்த்தியும் உருவற்றுப் போக
அவளின் தவிப்பு என்னுள் ஊறி அடங்க
ஆசுவாசமடைந்தேன்
பாரதி வந்தான்
இருளென்பது குறைந்த ஒளியென
மீண்டும் நாவலை விரித்து
அப்பெண்ணை எழுப்பினேன்
என் வாழ்வைப் போலிருக்கு
உன் சூழலுமென மறுத்தாள்
வேறு வழியின்றி பராசக்தியிடம் முறையிட்டேன்
இருளிலும் வாசிக்கும் வல்லமை வேண்டி.
0

கனவு வேட்டை

காலியான ஊறுகாய் பாட்டிலில்
கையளவு கடலை நிரப்பி
அடம்கொண்டு வாங்கிவந்த
தங்கநிற மீன்களை மிதக்கவிட்டான்
நட்புகளுக்கு வேடிக்கை காட்டிவிட்டு
மீனாக மாறி உடன் நீந்தியபடியிருந்தான்
என்ன சாப்பிடும் எத்தனைதடவை சாப்பிடும்
பாத்ரூம் இல்லையே பாட்டிலில்
உச்சா ஆயி எங்கே போவுமென
கேள்விகளால் எரிச்சலூட்டியபடி இருந்தான்
அது குட்டி போட்டதும்
பெரிய்ய தொட்டி வாங்கிக் கொடுக்கனும்
லைட்டு கல்லு கடலு வேணுமென
தேவைகளை பட்டியலிட்டான்
இரவு தூங்கப் போகும் முன்
பொம்மை நாய் ஒன்றை காவலிட்டான்
அன்றைய நடுநிசியில்
கோவென அழுதபடி எழுந்தான்
கேட்க கேட்க அழுகையை உயர்த்தியபடி இருந்தான்
வயிறு தலை கால் வலிக்கிறதாவெனும்
எங்களின் கேள்விகளை சகிக்காது
நாய் என் மீனை தின்னுடுச்சி என்றான்
உயிரூட்டிய மெழுகுவர்த்தியின் ஒளியில்
சுற்றிக் கொண்டிருந்த மீனைக் காட்ட
நீ காப்பாத்தியதை பாக்கலப்பாவென
இறுக்கி அணைத்தபடி உறங்கிப்போனான்
வேட்டையாடத் துவங்கியது
பொம்மை நாய்
என் கனவை...

nantri: uyir ezluthu

No comments:

Post a Comment