Wednesday, October 3, 2012

நேற்று காலை சிற்றுண்டி முடித்து
வாசலில் அமர்ந்திருந்தேன்
கொஞ்சம் ஆட்டுப் பால் வேண்டுமென
காந்தி வந்தார்
பட்டியே இல்லை
ஆட்டிற்கு எங்க போகவென்றேன்
பரிதாபமாக எனை பார்த்தார்
இருவரும் பயணித்தோம்
பட்டிகளைத் தேடி
பெரும் யாத்திரையாகிட
களைத்து திரும்பினோம்
கசாப்புக் கடையொன்றில்
தொங்கும் ஆடு பார்க்க
அழுது புரண்டார்
பெரும்பாடாகிவிட்டது தேற்றி
இடம் கடந்து வர
சிறு தொலைவுக்குப் பின்
தோட்டம் ஒன்றில்
வட்டமாக இளைஞர்கள்
என்ன செய்கிறார்கள்
வேண்டாம் போகலாம் என்றேன்
அவரின் பார்வைக்கு
பொய்யுரைக்க மறந்து
மது அருந்துகிறார்கள் என்றேன்
ஹேராம் என தலையிலடித்து
அரசு என்ன செய்கிறது
பார்வையை கேள்வியாக்கினார்
சிரிப்பை கட்டுப்படுத்த இயலாது
கடை நடத்துவதே அரசுதான்
ஐயோ...வென மயங்கி சரிந்தார்
இதுதான் சமயமென
பாக்கெட்பாலில் நீர்கலந்து
முகம் தெளித்தேன்
அரைமயக்கத்தில் ஆட்டுப்பாலாவென்றார்
ஆமென பொய்யுரைக்க
அருந்திய வேகம் தனிய
சுவை இல்லை என்றார்
எல்லாவற்றிலும் கலப்படம் என்றேன்
எங்கு எப்படி கிடைத்ததென
கேட்கத் துவங்கும் முன்
இனி உங்க ஜனன நாளில் மட்டும்
வாருங்கள் என்றேன்
போதுமடா சாமி
என்றும் வரமாட்டேனென
கரைந்து போனார்...

No comments:

Post a Comment