Tuesday, March 26, 2013

வானவில்லான மோகப்பரிபூரனி
ந.பெரியசாமி

தாயின் மடியில் கிடத்தி தந்தை கால்களை அமுக்கிப்பிடித்து தங்கள் குழந்தையை தாங்களே வெட்டிச் சந்தோசமாக சமைத்துத் தந்தால்தான் உண்ண வருவேன் உன் இல்லமென்ற அடியாரின் கோரிக்கையை கூற தாயானவள் என்ன இது ஈசனின் சோதனையென கதறி அழும் பாடல். என் தாத்தா வெகு ராகமாக பாடிக்கொண்டிருக்க கட்டில் அடியில் படுத்தவாறு கேட்டு அழுதுகொண்டிருப்பேன். எப்படித்தான் ஒரு மனிதனை அழவைக்கும் அளவிற்கு தாத்தாவால் பாடல் எழுத முடிந்தது என வியந்து நாமும் என்றாவது இப்படி எழுதவேண்டுமென நினைத்துக்கொள்வதுண்டு. காலப்போக்கில்தான் தெரிந்தது அது சிறுதொண்டர் புராணத்தில் வரும் நாடகக் காட்சிப்பாடலென்று. ஏனோ அன்று எழுந்த ஆசையின் விளைவால் யார் எதை எழுதியிருந்தாலும் ஆவலோடு படிப்பதும் அவர்களை கொண்டாடுவதும் இயல்பாகிப்போனது. அதன் நீட்சிதான் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்ந்தவன் கவிதை எழுதுவான் எனத் தெரிந்ததும் வலியப்போய் அவனோடு நட்பாகி அவனின் நெருங்கிய நண்பனாய் எனைக் காட்டிக்கொள்வதில் அலாதி பிரியம். அன்றைய விதைதான் இன்றளவும் எழுத்தை கொண்டாட்டமாக பார்க்கச் செய்திடுகிறது. சமீபத்தில் கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பை வாசித்தேன். என்னோடு நெருங்கிக் கிடந்த சில கவிதைகளில் நிகழ்ந்த என் பயணத்தை உங்களோடு பங்கிட்டுக் கொள்கிறேன்.

மீன் குழம்பின் ருசிக்கு தன் முதல் புத்தகத்தை சமர்ப்பணம் செய்யும் கதிர்பாரதியின் எளிமையான மனம் எளிமையான கவிமொழியையே பிறப்பித்திருக்கிறது.

அரிதாக நடைபெறும் சில நிகழ்வுகள் தனக்கேயான பொக்கிசங்களைக் கொண்டிருப்பது இயல்பு. அப்படியான பொக்கிசத்தை தரிசிக்கலாம் ‘குடும்பப் புகைப்படம்’ கவிதையில். பெரும்பாலான வீடுகளில் சட்டமிட்டு வரிசையாக புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். எல்லா நாளும் அதை நின்று வேடிக்கை பார்ப்பதில்லை எவரும். என்றாவது பார்க்க புகைப்படத்திலிருக்கும் மாந்தர்கள் அப்புகைப்படம் எடுப்பதற்கான சூழல் அக்கணத்தின் பெருங்கதையென ஏதோவொன்றை சொல்லத் தவிப்பதுபோல் இருக்கும். புகைப்படம் எடுப்பவர், சட்டம் போடுபவர், கண்ணாடி தயாரிப்பவர்கள், வீட்டில் மாட்டிவைப்பதற்கான ஏற்பாடு செய்பவர்கள் என தொழில் சார்ந்த பிழைப்பும் அதில் இருக்கும். அதையெல்லாம் நாம் கொன்றுவிட்டு இப்போ கடவுளாகிவிட்டோம். கனிணியிலும் அலைபேசியிலும் தடவித் தடவி புகைப்படங்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறோம்.

துடைத்து துடைத்து பெரும் சுத்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு ஒட்டடைகளைப் பார்க்க பெரும் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. ஆனால் கதிர்பாரதி ‘காலாதிகாலத்தின் தூசி’க் கவிதையில் ஒட்டடையை ஒரு மந்திரக்கோலாக்கி நூற்றாண்டகளின் நிழலை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு முக்கிய கவிதை ‘உயிர் பந்தல்’ மீச்சிறு காலமே வாழ எனக்கு நேர்ந்திருந்தாலும் வயலும் வயல் சார்ந்த வாழ்வுக்குமான நாட்களை மழைத்துளிகளாக சேகரிக்கச் செய்தது. பொறுக்குத் தட்டிய விளைநிலம், வெள்ளாமை தின்னும் கால்நடை, விதைப்புக்கால வரப்பு, சுமைதாங்கி மீது வளரும் துயரமென ஒரே கவிதையில் அனுபவ நீர் பாய்ச்ச நிறைய்ய வாய்க்கால்களை வைத்துள்ளார். எவ்வளவுதான் சேந்தினாலும் ஒரு வாய்க்காலில் கூட நீரை ஓட விட முடியாத பெரும் துயர் கணக்க நகர்ந்தேன்.

எனை பாதிக்கும் ஈர்க்கும் பெண்கள் உடன் பிறப்பெடுப்பார்கள் மதுவாகினியாக. அவர்களின் நிழலாய் மனம் தொடர்ந்தபடி இருக்கும். கதிர்பாரதியும் பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கிறார் ஆனந்தியோடு...

ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் கவிதையின் காட்சியாக்கம் எனை திரும்பத் திரும்ப வாசிக்கச்செய்து தட்டானாக உருமாற்றிக்கொண்டே இருந்தது.

காலத்தை பந்தென அங்கிட்டும் இங்கிட்டுமாக உருட்டி விட்டு தவ்வித் தவ்வி அவைகளை உயிர்ப்பித்து ரசிக்கும் விளையாட்டை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் உலகு. அவர்களோடு நாம் இருக்கையில் நம் வயதை தொலையச் செய்யும் அதிசயமும் உண்டு. துயர்களை ஆறுதல்படுத்த தண்ணீர் ஏந்தி நின்று, உறக்கத்தில் பால்யம் நனைத்து, பக்கம் பக்கமாய் புகார் நிரப்பி, ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் வனவிலங்குகளின் குணாதிசயங்களை போக்கி ஒன்றெயொன்று தழுவி விளையாடச் செய்யும் மந்திரக் குகைக்குள் நுழைத்து பேரதிசயங்களைக் தரிசிக்கச் செய்திடுகிறார் ‘குழந்தைகளும் குழந்தைகள் நிமித்தமும்’ கவிதையில்.

ஒரு குளம் ஏழு குளமாக விரிந்து ஏழுவிதமான வண்ணங்களை காட்டி, ஏழுவிதமான ருசியை உணரச்செய்து மனதில் சில்லிப்பை ஏற்படுத்தின ‘குளத்தில் அலைகின்றன கவிதைகள்’.

வாசிப்பவனின் மனதில் இருக்கும் கடவுளையும் ஏக்கத்தில் விழச்செய்திடுகிறது ‘ஏக்கத்தில் விழுதல்’ கவிதை.

வறுமையும் நிராகரிப்பும் தன்னைச் சுட்டெரிக்க குளிர்ச்சிக்கொள்ள வீழ்ந்து மாண்ட நல்லதங்காள் கிணற்றை நினைவூட்டியது ‘வீட்டை எட்டிப் பார்த்தல்’ கவிதை.

மலைக்குன்றையும் நடுங்கச் செய்யும் வல்லமைகொண்ட கவண்கல்லைத் தூக்கி ‘மலை நடுக்கம்’ கவிதையை பேசும் கதிர்பாரதி மூன்று மச்சலங்காரத்தில் மிகு கிளர்ச்சி அடைந்து நான்காவது மச்சத்திற்காக நாற்றங்கால் விதைத்து மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என பொய்யுரைக்கிறார்.

முதல் காமத்தின் இரவு விடிந்ததும் போர்த்திய ஆடையில் தீட்டிய சந்தோசக் கரை பார்த்து சுருட்டிய இரவை கக்கத்தில் வைத்துக்கொண்டு கண்களில் காமவிளையாட்டுகளை சமிக்ஞை செய்து கடந்த வண்ணாத்தியின் மகிழ்வோடு மோகப்பரிபூரனி நீயென ரதியின் மடிசாய்ந்து அமைதிகொள்ளச் செய்தது தொகுப்பின் வானவில்லென வீற்றிருக்கும் ‘மோகப்பரிபூரனி நீ’

‘அப்படித்தான் விழுகிறது’ கவிதையில் விழுகின்றன... விழுகிறது... எனும் வார்த்தைகளை தடதடத்து விழச்செய்து பயணம் முடிய அருகிலிருப்பவனின் முகம் மறந்து போகும் நிலை அக்கவிதைக்குமான நிலையாகிப்போனது...

விட்டேத்தியான மனநிலையில் இருப்பவனிடம் காட்டப்படும் பிரியம் அவனால் அம்மனநிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் தேநீர் தயாரித்துத் தரும் பிரியத்தால் அரசாங்கத்தை கலைத்துவிடலாம்தான் என நக்கலடித்து கடக்க நினைக்கையில் பிரியம் அம்மனநிலையின் உயிரை பிளேடால் அரிந்து போக்கச்செய்து ஊர்சுற்றி, எதிர்பாரா கணத்தில் முத்தம் பெற்று, உப்பு மூட்டைத் தூக்கி விளையாடி, ஊடலால் கூடல் அரங்கேறி, அழுது, பதற்றப்பட்டு, பரிசளித்து, கொஞ்சுவதிலிருந்து மீள ஈசல் வார்த்தைகள் என வெறுக்கத் துவங்கினாலும் நிழலாய் உள்ளார்ந்த அன்பை ‘என்ன செய்யலாம்’ கவிதை வெளிப்படுத்தத்தான் செய்திருக்கிறது.

செயல்கள்... அச் செயல்கள் சார்ந்த ஒப்புமை, அந்த ஒப்புமை உண்டாக்கும் அற்புதமென கவிதையை ரசித்து ரசித்து வாசிக்க முடிவில் திரண்டு புடைத்திருந்த ரசனையை சிரிப்பாக்கி துப்பாக்கியுள் நிரப்பும் லாவகம் மகா உன்னதம்.. ‘துப்பாக்கிக்குள் நிரப்புகிறது சிரிப்பு’ கவிதையில்.

காமத்தை சிறுநீரில் கழித்து குப்புறப் படுத்துக்கொள்ளும் மகாகவி குறித்த கவிதையாக்கம் தெருக்கூத்திற்காக ராஜா வேஷத்திற்கு அரிதாரம் பூசி ஆடை அணிகலன்களால அலங்கரித்த பின் தன் அழகை தானே ரசித்து ராஜாவாகி கணம் மிளிரும் ஒளி பொருந்திய சூழல் ‘மகாகவி கவிதை’ தலைப்பிலிருக்கும் ஏழு கவிதைகளிலும் பொருந்தியிருப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது. தொகுப்பில் 1,2,3...யென எண்ணிட்டு எழுதியிருக்கும் எல்லா கவிதைகளுமே ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது.

மது, மதுக்கூடம் குறித்து எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளுமே மதுவோடு கலவிகொண்ட மயக்க நிலையிலிருந்து வெளிப்பட்டவையாக இருப்பதால் சிறப்பானவையாகவே இருந்திருக்கின்றன. கதிர்பாரதியின் ‘மதுக்கூடங்களோடு புழங்குதல்’ கவிதையும் அச் சிறப்பை மெருகேற்றியிருக்கிறது தனித்திருப்பவனின் விசும்பலில்... மது, மதுக்கூடங்களைப் பார்க்க, வாசிக்க நேர்கையில் மதுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவனின் பையிலிருந்து சிதறிய கோலிக்குண்டுகளை மது அருந்த வந்தவர்களும் அவனோடு சேர்ந்து பொறுக்கினார்கள் அவரவர்களின் பால்யத்தையும் என முடித்திருக்கும் யூமா.வாசுகியின் கவிதை இன்னமும் தொடர்ந்து நினைவில் வந்துகொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை.

‘கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்’ கவிதையைப் போன்று ரசித்து ரசித்து வாசிக்க தொகுப்பில் நிறைய்ய கவிதைகள் இருப்பதால் படித்து முடித்தோமென தூக்கிப்போட்டு விடாது என்றாவது மீண்டும் வாசிக்க வேண்டும் எனும் மனநிலையை கொடுக்கும் தொகுப்பாக இருக்கிறது கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்...’ கதிர்பாரதிக்கும் தொகுப்பாக்கிய புதுஎழுத்து மனோன்மணிக்கும் என்றென்றும் எனதன்புகள்...

nantri: malaigal.com

No comments:

Post a Comment