Saturday, June 1, 2013

நெட்டிலிங்கப்பூ

வீழ்ந்தும் மலர்ந்திருந்த
நெட்டிலிங்கப் பூவின் எதிர் அமர்ந்தேன்
எனக்கான கலயத்தை நிரப்பி
அதற்கும் துளி ஊட்டினேன்
பிரதேசத்தை இளம் மஞ்சள் நிறமாக்கியது
என் பார்வையின் எல்லைக்குள்
அனு உலையேதும் நிறுவப்படாமலிருக்க
கிடைத்த சாவகாசப் பொழுது கரைந்தது
நிழலாய் போராடுபவர்களின் துயரம்
உருமாற்றம் கொள்ளச் செய்யும்
ரசவாதமிருப்பின்
தாய்ப்பாலென புகட்டி
கரப்பான்களின் பிரதேசமாக அறிவித்து
களிப்படைந்திருக்கும் அரசு
வழியற்றுப் போக
வெளியேற்றப்படவேண்டிய கழிவுகளாய்
பதிவேட்டில் படிந்த எம்மக்களின்
துளிர்த்தெழும் அறப்போராட்டங்கள்
வெற்றிகொள்ளுமெனும் நம்பிக்கையில்
ததும்பத் துவங்கியது நெட்டிலிங்கப்பூ.

நன்றி: காக்கைச் சிறகினிலே மே 2013

No comments:

Post a Comment