Thursday, June 11, 2015

தூய்மை ராஜாவின் வாத்துகள்

1.
தூய்மை ராஜாவின் வாத்துகள்
*
தன் வல்லமைகளை
அறிந்தே மௌனித்திருக்கும் வாத்துகளை
குளம் மிதக்கும் தாமரையின்
உருவம் பொறித்த குடுவையினுள்
நுழையச் செய்திட்டனர்.

தூசுகள் படிந்து பரனில் கிடந்த
செங்கல்நிற பழந்துணியால்
அதன் வாயை இறுகக் கட்டினர்,

தன் உளறல்களைக் காட்சியாக்கி
அற்புதம் நிறைந்ததென
மிருதங்கத்தில் பெருமிதம் இசைத்தனர்.

குணமாக்கப்படாத அவஸ்தைகளோடு
தன் வங்கிக் கணக்கெண்ணை
மனனம் செய்தபடி வாத்துகள்

உலகம் மெச்சிக்கொண்டிருக்கிறது
தூய்மை ராஜாவை.
*
2.
மழைவெய்யில்

வானின் துண்டாகக் கிடக்கும் மொட்டைமாடியில்
நானும் நியும்
இத்தருணத்திற்கான காத்திருப்பின்
காலங்களை அறியாய்.

மிட்டாய்களின் நிறங்களை ரசிக்கும்
சிறுவனாகிறேன்
மேலும் சின்னஞ்சிறுவனாவேன்
உன் ஸ்தனங்கள்
அருந்தக் கிடைக்குமெனில்
அற்புதங்கள் கனவுகளுக்கானவை
விட்டுவிடலாம்.

சீம்பால் துண்டுகளாக
உன்னுடனான சம்பவங்களின் நினைவுகள்
விழுங்கி விழுங்கி
உலகைத் தித்திப்பாக்குகிறேன்

உண்மைதான் அன்பே
இறுகத் தழுவி முத்தமிடு
நாளை உலகத்தார்
சிறுவர் சிறுமிகளாவர்
வெய்யிலும் மழையும் கலந்து பெய்யும்.

நாம் மட்டும் அறிவோம்
வெய்யில் நீ மழை நான்  என்பதை.

nantri:pudhu Ezuthu

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதையில் கற்பனை சிறப்பு இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment