Wednesday, February 24, 2016

ஸ்ரீநிதியான கணங்கள்...


எல்லோரும் வெறித்து பார்த்தபடி இருக்க, ஆளாளுக்கு பாலை மாற்றி மாற்றி ஊற்றினர். எந்த பலனும் இல்லாது போயின. அந்நேரத்தில் தன் சைக்கிளின் பெல்லை அடித்தவாறு இறங்கிய தபால்காரர் வாசலிலிருந்து கத்தியபடி வந்தார். ஆத்தா உங்க பேரன் புறப்பட்டானாம் பொங்கலுக்கு வந்துவிடுவான் என்றபடி கடிதத்தை நீட்ட ஜிங்கென கிழவி எழுந்து ஒட்கார்ந்தது. அடேய் கிழவி உசுரு மிலிட்டிரிப்பேரன் கடிதாசியில் இருக்குவென உரக்கக் கூற எல்லோரும் சிரித்து அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டார்கள். கடிதம் உயிர் எனும் வார்த்தைகள் என்னுள் ஆழமாக பதிந்தது. கடிதம் உயிர்தான் என்பதை எனக்கு வந்த சில கடிதங்கள் உணர்த்தியபோது அதன் மேன்மை உணர்ந்தேன். கடிதம் எழுதும் சிறுவயது பழக்கம் தொடர்ந்து நிறைய்ய நண்பர்களுக்கு கடிதம் எழுதச்செய்தது. கவிதைகள் எழுதத் துவங்கி அது இதழ்களில் பிரசுரமாகத் துவங்கிய பின் நிறைய்ய கடிதங்கள் வர அவ்வளவு உற்சாகமும் பூரிப்புமாக இருக்கும். சிலரின் கையெழுத்துக்களை பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். சில கடிதங்களைத் திரும்பத் திரும்ப எடுத்து வாசிப்பதும் இன்னும் தொடர்ந்தபடி இருப்பதை உணர்த்தியது யாசகனின் ''கடவுளின் நூறு முத்தம்'' எனும் கடிதங்களின் தொகுப்பு.
யாசகன் தன் மகளுக்காக எழுதுவதாக நினைத்து அவருக்கு அவரேவாகவும், அவருக்கும் நமக்குமாகவும், அவருக்கும் காலத்திற்குமாகவும், அவருக்கும் சூழலுக்குமாகவும் எழுதப்பட்ட கடிதங்களாகவே இருக்கிறது ''கடவுளின் நூறு முத்தம் '' தொகுப்பு. யாசகனின் மகளான ஸ்ரீநிதிக்கு இப்புத்தகம் பெரிய பொக்கிசமாக இருக்கக்கூடும். தன் அப்பாவின் காலம் குறித்து ஸ்ரீநிதி அறிய முற்பட்டால் அவரின் இயல்பு, அவர் எதிர்கொண்ட இன்னல்கள், சூழல் மாற்றம், நண்பர்கள் என விரிந்துகொண்டே போகும்.
அவரை கவிதை எழுதத் தூண்டிய சம்பவங்கள், அவருக்கு பிடித்த கவிதைகள், அவரை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய கவிதைகள் என இத்தொகுப்பு கடிதங்களின் தொகுப்பாகவும் அவரின் கவிதைத் தொகுப்பாகவும் உள்ளது.
யாசகனின் சொந்த நிலமான வேலூரின் வெப்பத்தை தொகுப்பில் பத்திரமாக அடைகாத்து வைத்துள்ளார். அவர் செல்லும் வேறு நிலங்களில் இருக்கும் குளிர்ச்சியை அனுபவிக்கும் போதெல்லாம் அவர் ஊரின் வெப்பம் பெருமூச்சாக வெளிப்பட்டவாறே இருக்கிறது. அவரின் ஆசையாக மட்டும் இல்லாது இச்சூழல் என் மக்களுக்கும் இல்லையே என அவரின் அக்கறை நமக்கு அவர்மீதான மதிப்பை ஏற்றுகிறது.
தான் வாசித்த , நேசித்த மனிதர்கள் குறித்த கடிதங்களில் வழியும் உணர்வெழுச்சி நமக்கான மனிதர்களின் நெகிழ்சியாகவும் உள்ளது. இவர் வாசித்த புத்தகங்கள் குறித்த கடிதங்கள் ஏனோ நமக்காக எழுதப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. நாம் அப்புத்தகத்தை வாசித்த சூழல், எதிர்கொண்ட விதம், காண்போரிடம் அது குறித்து பேசித்திரிந்த நாட்கள் என நமக்கான வாழ்வையும் இக்கடிதங்கள் பத்திரமாக வைத்திருக்கின்றன. சில புத்தகங்களை திரும்பவும் மறுவாசிப்பு செய்யத் தூண்டுகின்றன. 'ஜன்னலில் ஒரு சிறுமி', மற்றம் கமலாலயன் மெழிபெயர்த்த மேரி மெக்லியோட் பெத்யூனின் ''படித்ததும், வாழ்ந்ததும்'' என இவ்விரு புத்தகத்தை மறுவாசிப்பு செய்தேன்.
ஆசை கொள்ளுதல் என்றும் இறுதியற்றதல்ல, மாற்றங்களை உடையது. ஓர் ஆசை நிறைவுகொள்ள மற்றொன்று துளிர்க்கும். ஜன்னலில் ஒரு சிறுமி வாசித்தபோது அப்படியானதொரு பள்ளியின் தொடர்பிலிருக்க ஆசை எழுந்தது. டோட்டோசன் என்றென்றைக்கும் நினைவில் இருக்கும் பெயராக இருக்கிறது. பள்ளி செல்லும் எல்லா குழந்தைகளையும் டோட்டோசன்னாக இருக்க வேண்டும் என்ற ஆசையுண்டு. அரசியலும் ஆசைமிகுந்தோறும் அதன் தடை கயிறுகளை சுழற்றியவாறு இருக்க அரிதினும் அரிதாகத்தான் டோட்டோசன்கள் இருப்பார்கள். எல்லாவற்றையும் மீறி ஒருவித சந்தோசம் ஏற்படத்தான் செய்கிறது. இந்த வாசிப்பு பழக்கம் இருப்பதால்தானே டோட்டோசன்னை அறியக் கண்டோம். இல்லையெனில் வேறு எங்கே அறிந்திருக்க போகிறோம். யாசகனின் இக்கடிதங்களால் டோட்டோசன்னின் விரல் பற்றிக் கிடக்க முடிந்தது.
'தன்'னில் உழன்று வாழும் வாழ்வில் எது எச்சியிருக்கப்போகிறது. தன் குடும்பத்திற்காக படித்து, வேலைபார்த்து, சொத்துசேர்த்து, தன் குடும்பத்தாரின் மகிழ்விற்காக மட்டும் அரும்பாடுபடும் பொழப்பை கேலியாக்குகிறார் மேரி. தன் பள்ளியில் படித்து வெளியேறுபவர்களை சமூக சேவை செய்யும் மனநிலையோடு வெளியேற்றுவது அசாத்தியம்தான். பள்ளிக்காக அவர் படும் பாடுகள் சித்திரங்களாக ஓடின.
எட்டுவயதிலிருக்கும் ஸ்ரீநிதிக்கு இக்கடிதங்கள் இப்பொழுது வாசிப்பதற்கான கடிதங்கள் அல்ல. அவருக்கான காலத்தில் இதை வாசிக்கவோ அல்லது கடந்துபோகவோ வாய்ப்புண்டு.ஆர்வத்தில் அவர் வாசிக்கத் துவங்கினால் பெரும் துணையாக இக்கடிதங்கள் இருக்கும். ஸ்ரீநிதி இக்கடிதங்களை தவிர்த்துவிடாது வாசிக்க வேண்டும் என்றே மனம் விரும்புகிறது.
நன்றி - புத்தகம் பேசுது

No comments:

Post a Comment