Saturday, February 18, 2017

 தோழர்
Elancheral Ramamoorthy
ந.பெரியசாமியின் நான்காவது கவிதைத் தொகுப்பு
“குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்”
பூங்கா தேவதை
தன் பிரசன்னத்தால்
எல்லோரும் சூழச் செய்தாள்
குட்டி தேவதை
கண்களை இறுக மூடச் சொல்லி
தேவைகளைக் கேட்டறிந்து
சொற்களைப் பிறப்பித்துப் பொம்மைகளாக்கி
கையளித்து மறைந்தாள்
அவரவரும் தம் பொம்மைகளோடு
உரையாடியபடியே கலைந்தனர். பக்-19
குழந்தைமையின் மீது கொள்கிற அக்கறைகள் அதிகமாகவேண்டிய காலம் இது. ந.பெரியசாமியின் கவிதைகளில் குழந்தைகள் உலகம் பற்றிய கனவு நனவுச் சித்திரங்கள் கொண்ட நூல் இது. மற்ற தனது தொகுப்புகளிலிருக்கிற கவிதைகளுடன் புதிய கவிதைகள் இணைக்கப்பட்ட தொகுப்பு இது. இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் சொற்றொடரைப் பேசத் துவங்கியதும் குழந்தைகளுக்குப் பாடம் வாசிக்கவும் ஓவியங்கள் வரையவும் நடனமாடவும் கற்றுக் கொடுத்துவிடவேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுகிற பொருளியல் புகழ் நோய் அதிகரித்துவிட்ட காலம். குழந்தைகளின் செயல்பாடுகளை ஆச்சர்யத்துடன் பேசி மகிழ்வதும் அதன் மீது எதிர்கால புகழ் போதையை ஏற்றுவதுமாக நடுத்தரக் குழந்தைவாசிகள் பழக்கப்பட்டுவிட்டார்கள். நவீன வாழக்கையில் குழந்தைகள் ஏற்கும் கதாபாத்திரங்கள் மிகவும் சிக்கலானது. பெற்றோர்களுக்குப் புகழையும் செல்வத்தையும் அள்ளி அள்ளிக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கடமைப்பட்டவர்களாக இருப்பதை ந.பெரியசாமி தன் கவிதைகளில் பேசுகிறார்.
குடும்பத்தில் குழந்தைகள் வெகுவாகக் குறைந்து போய்விட்ட காலமும் இது. அச்சுருத்தும் எதிர்காலப் பொருளாதார வாழ்வு. பணத்தையும் பணப்பரிவர்த்தனை அட்டைகள் கடன் அட்டைகள் சூழப்பட்ட வாழ்க்கையில் ஆறுதல் தந்து கொண்டிருப்பவர்கள் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையும் சுட்டுவது எதிர்காலத்தை நமக்கான எதிர்காலத்தை. ஆனால் அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அக்கறையோ ஆர்வமோ சிலாகிப்போ இல்லாதவர்கள் குழந்தைகள். உண்மையைப் பேசுவதனால் குழந்தைகளுக்காகத்தான் பெற்றோர்களில் சில கலைஞர்களாக மாறத்துவங்குகிறார்கள். குழந்தைகள் மூலமாகத் தான் அச்சத்தை உணர்ந்து விடுபடக்கற்றுக் கொள்கிறோம். எந்தத் திணிப்பையும் எதிர்க் கேள்விகளால் கட்டுடைப்பைச் செய்கிற முதல் கலைஞராக அறியப் படுகிறவர்கள்
குழந்தைகள் பற்றிய விவரணைகள், செய்திகள், விவர அட்டவணைகள் சமகாலத்தில் அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரே குழந்தையை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு அதிகமான வசதிகளைப் பெற்று உலகம் தெரியாமல் வளர்கிற குழந்தையும் சமூகத்தில் உள்ளது. அதே போல ஏழை எளிய மக்களின் சேரிகளில் ஒரு சத்துணவு ஆயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வசிக்கிற குழந்தைகளும் உண்டு. எந்த இடத்திலும் இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று அவர்களின் கனவுகளுக்குரிய இடங்கள்தான். காணவிரும்புகிற இடங்கள்.
குழந்தைமை அறியாத ஒன்று ஏற்றத்தாழ்வும் அதன் பகிரங்கங்களும். அவன் ஏன் மிகவும் சிவப்பாக அழகாக குண்டாக இருக்கிறான். விளம்பரங்களில் வரும் குழந்தைகள் எங்கிருந்து வருகிறது. நிஜமாகவே அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அதே போல அவர்கள் விரும்புவது வாங்கித்தருகிறார்களா பெற்றோர்கள் எனும் சந்தேகங்கள் எழும். அவர்களின் சந்தேகக் கேள்விகள்தான் இந்த உலகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டிப்பார்க்கத் தோன்றும் விசயம்.
ந.பெரியசாமியின் இந்த நூலில் உள்ள கவிதைகளில் குழந்தைமையின் நவீன மனஉலகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள சிறார் இலக்கிய வகைமையிலிருந்து நவீன கவிஞனின் பார்வையில் குழந்தைமையின் கனவுகள் பற்றிய சொற்களைக் காணமுடிகிறது. புத்திசாலித்தனமிக்க குழந்தைகளுக்கும் கவிஞனுக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதை உணரக்கூடியதாக இக்கவிதைகள் உள்ளது. பல நூறு குடும்பங்கள் உள்ள ஒரு தெருவில் நான்கைந்து குழந்தைகள் மட்டுமெ தெருவில் விளையாடிப்பார்க்கும் அருகதை கொண்டவர்கள் நாம். நம்முடைய பிரதான பொழுதுபோக்கே குழந்தைகளின் அறிவார்த்தமான செயல்பாடுகளைக் குற்றம் சொல்வதும் மறுத்து வாதிடுவதும்தான்.
நிழல் சுவை
உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
உருமாற்றப் படையெடுப்புகள்...
எனக்கிது போதுமென
கொடுத்தத் திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்.-------பக் 34
மேலே குறிப்பிட்ட கவிதையில் உள்ள பண்புருவமும் புனைவும் மாய எதார்தமும் நிறைந்த கவிதையாக அமையப்பெற்றதாகும். முப்பது கவிதைகளே அடங்கிய தொகுப்பு என்றாலும் கவித்துவத்தின் பளுவை உள்ளடங்கிய தொகுப்பு. Intuition எனும் உள்ளுணர்வு மிக்க கவிதைகள் பல உண்டு. குழந்தைகள் உள்பட பல எளிய வாசகர்கள் வாசித்து அறிய முடியாத வண்ணம் முழுமையாக நவீன கவிதையின் உருவகங்களும் படிமங்களும் நிறைந்தவையாக இருப்பது விமர்சனத்திற்குரியது. ந.பெரியசாமி விரும்பும் “கொட்டுக்காய்“த் தனமிக்க விமர்சனம் இது.
குழந்தையின் மனத்திலிருந்தும் கவிஞனின் மனத்திலிருந்தும் வெளிப்படுகிற சொற்கள் முற்றிலும் பல முரண்களையும் திருப்பங்களை அரூபமான கனவிலி சம்பவங்களையும் சொல்கிறது. மிக இயல்பாக மிக எளிய முறையிலேயே விவரித்திருக்கலம். “அப்படியா நான் நினைத்தேன்..நான் அந்தப் பொருளில் சிந்திக்கவில்லையே“ குழந்தைகள் மனம் எதிர் கேள்விகள் கேட்கிற தொனியில் சில கவிதைகள். என்றாலும் எதாவது குறிப்பிடவேண்டுமே என்பதல்ல.. எளிமைக்கும் நவீன வடிவத்திற்குமான அமைப்பியல் என்பதே தர்க்கத்தை விளைவிக்க வைப்பதே..நவீனத்திற்குத் தர்க்கம்தான் அவசியம்..
வாழ்த்துக்கள் பெரியசாமி.. தக்கை நண்பர்களுக்கும் அன்பு...

No comments:

Post a Comment