Saturday, February 11, 2017

Leena Manimekalai
தக்கை வெளியீடாக வந்திருக்கும் நண்பன் கவிஞர் பெரியசாமியின் நான்காவது கவிதை தொகுப்பு. அவ்வளவு மென்மையாகவும் அவ்வளவு கனமானதுமான "கொட்டு'க்காய்கள். தொகுப்பை வாசித்து முடிக்கும்போது வீடெங்கும் குழந்தைகள் நிரம்பி, மடியில் ஒன்று, தோளில் ஒன்று, முதுகில் ஒன்றென ஒரே சலசலப்புடன் விளையாடிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. வெறும் தாள்களையும் வார்த்தைகளையும் குழந்தைமையைக் கொண்டு மாய நிலமாக மாற்றிப் பார்க்கிறார் கவிஞர். புதைந்த குரல்கள், வலியின் சித்திரங்கள், அலெக்ஸ் மரம், அருவி, கனவு மோதிரம், வாஞ்சையின் கடும் ஈரம் போன்ற கவிதைகள், குழந்தைகளின் பிரத்யேக உலகத்திற்கு உள்ளே அழைத்துச் செல்வதும் வெளியிலிருந்து அவதானிப்பதாகவுமாய் நம்மோடு உரையாடுகின்றன.
குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்
பாட்டியின்
கதை மோதிரத்தை
- இது மேற்கோள் கவிதை யல்ல. கவிஞன் அடைகாத்த மழழைப்புலம்.
சித்திரங்கள் உயிர்பெற்று வரும் motiff திரும்ப திரும்ப வருவதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி நல்ல வாசக மனம் இருந்தால், கவிஞனோடும் கவிஞன் படைக்கும் குழந்தைகளோடும், நாமும் பொக்கை விழுந்த வானத்திலிருந்து விழும் நட்சத்திரங்களுக்காக ஆவென வாயைப் பிளந்துக் கொண்டு நிற்கும் உற்சாகம் வாய்க்கும்.
பெரியசாமிக்கு என் அன்பு முத்தங்கள். <3

No comments:

Post a Comment