Monday, February 27, 2017

Suthenthiravalli Manivannan
குட்டி மீன்கள் நெளிந்தோடு்ம் நீலவானம்
_______________________________________________
ந.பெரியசாமி
_______________
மெட்ரிக் மேல் நிலை பள்ளி ஒன்றில் ஏழு வருடங்களாக எல்.கே.ஜி.,யு.கே.ஜி.க்கு வகுப்பெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் பள்ளி திறக்கும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே காய்ச்சல் வந்து விடுவது போன்ற பயம் அப்பி கொள்ளும். பள்ளியில் எல்.கே.ஜி.க்கு நான்கு பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் ஏறதாள அறுபது குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் இருப்பார்கள். பள்ளி திறந்த முதல் இரண்டு வாரம் குழந்தைகளை பராமரிப்பது மிக சிரமம். அறையின் கதவுகள் மூடியே இருக்கும் சில நாட்கள்.சில குழந்தைகள் தவிர்த்து மற்ற குழந்தைகள் அழுது உருண்டு எதுவும் கேட்காது சிரமபடுத்துவார்கள். குழந்தைகளின் குணங்களிலிருந்து அவர்களது பெற்றோர்களை அறிந்து கொள்வோம். ஒரு பெண்குழந்தையின் அப்பா அவளை வகுப்பறையில் விட்டுட்டு அங்கேயே பத்து பதினைந்து நிமிடங்கள் நின்று அவள் புத்தக பை சாப்பாட்டு பை அதனதன் இடத்தில் வைத்துகொண்டு தனது இருக்கையில்இருந்து ஆசிரியரை கவனிக்கும் வரை நின்று கொண்டிருப்பார். மாலையில் அவளை தூக்கிகொண்டு முகம் முழுக்க முத்தம் பதித்து கொண்டு குழந்தை சிரிக்க சிரிக்க கொண்டு செல்வார். அந்த குழந்தை ஆசிரியருக்கோ மற்ற குழந்தைக்கோ எந்த சிரமமும் தராது இருப்பாள். பல குழந்தைகள் பழகுவது வரை வகுப்பறையை சிறைசாலை போன்றே உணர்வதுண்டு. அறுபது குழந்தைகள் இருந்தாலும் கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் குணங்களை தனி தனியே புரிந்துவைத்து கொள்வோம்.
கவிஞர் ந.பெரியசாமி யின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் என்ற கவிதை தொகுப்பு குழந்தைகளின் அக புற உலகின் அழகியலை இயல்பாகவும் கற்பனையும் கலந்து சித்தரிக்கிறது. குழந்தைகளின் உலகம் விசித்திரமானது கவிதைகளுக்குள் அடங்கிவிடாது என்பதே எனது எண்ணம்.
தொகுப்பின் முதல் கவிதை
அலெக்ஸ் மரம்
________________
பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட
கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு
வந்தவன் காட்டினான்
வரைந்த ஓவியத்தை
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா இது
அலெக்ஸ் மரம் என்றான்
சரிசெய்யும் பதட்டத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்
ஏற்க மறுத்தவன் கூறினான்
என் மரம்
என் பெயர்தான்.
இந்த கவிதை அதிகமாக கவர்ந்தது. குழந்தைகளின் ஏற்க மறுக்கும் குணத்தை இயல்பாக சித்தரிக்கிறது. அபாரமானதும் கூட.
கனவு மோதிரம்
___________________
குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்.
பாட்டியின்
கதை மோதிரத்தை.
குழந்தைகளின் கற்பனை அழகியலை இக்கவிதை சித்தரிக்கிறது.
உடனாளிகளோடு உண்பவள், துணை வானம் ,வெற்று தாளை வனமாக்கியவன் ,தலையணை, மிஞ்சிவிட்டதான மிளிர்வு ,அருவி,
போன்ற கவிதைகளும் எனக்கு பிடித்தமானவை.குழந்தைகளை மொழிக்குள் வசமாக்கியிருக்கிற முயற்சியும் கூட. வாழ்த்துகள். தக்கை பதிப்பக வெளியீடு.
______________________________________________
எஸ்.சுதந்திரவல்லி.

No comments:

Post a Comment