Monday, April 3, 2017

நூல் அறிமுகம்: கமலாலயன்

குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
நூல் அறிமுகம்: கமலாலயன்

குழந்தை ரயில் வண்டியின் கடைசிப் பெட்டியென ந.பெரியசாமியின் கவிமனதை உருவகிக்கிறார் கவிஞர் சம்பு. 2004-2014ம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட பத்தாண்டுகளில் ஆரவாரமின்றி மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தவர் ந.பெரியசாமி. இவருடைய மூன்றாவது தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கே.சி.எஸ். அருணாசலம் நினைவு விருதும், கலகம் விருதும் வழங்கப்பட்டுள்ளன.

மீன்கள். அதிலும் குட்டி மீன்கள். நெளிந்தோடும் நீலவானத்தை நோக்கி தூண்டில் விசுகிற குழந்தைகளின் மன உலகைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் கவிஞர். ஏங்கியழுது வெறுமையாய்க் கிடக்கும் வெற்றுத்தாளில் பிஞ்சுக்கைகள் ரதமொன்றை வரைகின்றன. இன்னொரு தாளில் புரவிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. உருவான ரதம் வீடு மினுங்கும் பேரழகோடு ஒளிர்கிறது. வானில் நிகழ்கிறது படைத்தவனின் பவனி.

அலெக்ஸ் வரைந்த மரத்துக்கு ‘ஆலமரம்’ எனப் பெயரிடுவது பெரியவர்களின் இயல்பு. ஏற்க மறுத்து வரைந்தவன் கூறுகிறான் ‘என் மரம் என் பெயர்தான்’ வகுப்பாசிரியர்களால் தான் அனுபவித்த வலிகளை கேலிச் சித்திரங்களின் மூலம் வெளிப்படுத்துகிறாள் அனாமிக. பெரும் குறும்புக்காரியாயிருந்த ஒரு சிறுபெண். கொஞ்ச நாட்களாகச் சத்தமே இல்லாமல் அமைதியாகிவிட்டாள். பள்ளிக்கு அனுப்பி ஒரே மாதத்தில் நடந்திருக்கிறது இந்த மாற்றம். உடனாளிகளோடு உண்ணுகிற குழந்தை, பூனை, ஆடு, மயில், யானை என காண்கிற எவ்வுயிரினூடாகவும் கூடுவிட்டுக் கூடு பாய்கிறவன், துணையற்றுத் தவித்துக் கிடந்த வானத்துக்கு ஒரு நிலா, ஒரு சூரியன், துணை வானமொன்று, நிறைய்ய நட்சத்திரங்களை வரைந்தனுப்பி வாட்டம் போக்கிய சிறுமி என்று ந.பெரியசாமியின் கவிதைகளில் உருவங்கொள்கிற குழந்தைகள் வசீகரமானவர்கள்.

குழந்தைகளிடம் அன்பாகவோ, கோபமாகவோ, அறிவுரைக்கும் விதமாகவோ பேசிவிடுவதோடு நின்று விடாமல் அவர்களுடைய எதிர்வினைகளைப் பொறுமையாகக் கவனிக்கிறார் கவிஞர். மண்ணுள் புதைந்து போன உயிர்களின் குரல்கனையும் கூட கூர்மையாகக் கேட்டு இனங்காணத் தெரிகிறது குழந்தைகளுக்கு. மேற்கண்டவாறு குழந்தைகளின் பலவகையான தருணங்களை கவிதைச் சம்பவங்களாக மாற்றி சின்னச் சின்ன கதைகளாக அவற்றைக் கவிதைகளில் பொதிந்து வைத்து நமக்குத் தருகிறார் ந.பெரியசாமி. றியாஸ் குரானாவும், சம்புவும் இந்த அம்சங்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். மேலட்டை ஓவியம், புனைவுலகின் விரிவாக அமைந்து கருத்தைக் கவர்கிறது. ‘தக்கை’யின்நூல் தயாரிப்பு அருமையாக அமைந்துள்ளது.
நன்றி: புத்தகம் பேசுது.

No comments:

Post a Comment